Tuesday 7 June 2011

புத்தனின் போதிமரத்தில் தொங்கும் உடல்கள்!

இந்தியா வித்தியாசமான நாடு!
உள்நாட்டுத் தொழிலாளர்களைப்
பிச்சைக் காரர்களாக்கும்!
வெளிநாட்டு முதலாளிகளைப்
பணக்காரர்கள் ஆக்கும்!

அமெரிக்கா விவரமான நாடு!
வெளிநாட்டு தொழிலாளர்களை
பிச்சைக் காரர்களாக்கும்!
உள்நாட்டு முதலாளிகளைப்
பணக்காரர்கள் ஆக்கும்!

இலங்கை விபரீதமான நாடு!
சவப்பெட்டிகளை தயாரித்து
சமாதானம் பேசும்!
சமாதானம் பேசிக் கொண்டே
ஏவுகணை வீசும்!

புத்தனின் போதிமரத்தில் - இன்று
செஞ்சோலை சிறுமிகளின்
உடல்கள் தொங்குகின்றன

செஞ்சோலை வளாகத்தின் மேல்
குண்டு வீசிப் பறந்தது
விமானம் அல்ல
சிங்கள ராணுவத்தின்
மானம்!

ஒரு ராணுவம்
எதிரி ராணுவத்தை தாக்கும்!
என்றும் வேவு பார்க்கும்.
ஆனால் அறுபது சிறுமிகளை
அடையாளம் பார்த்துக் கொன்றது ஏன்?

இலங்கை ராணுவம் தெரிந்து வைத்திருக்கிறது
ஈழத்துச் சிறுமிகளுக்கு
பூக்கோலமும் போடத் தெரியும்
போர்க்கோலமும் பூணத் தெரியும்

அவர்களுக்குப்
பல்லாங்குழியும் ஆடத் தெரியும்
பகைவர் தலைகளுக்கு
பிணக்குழியும் தோண்டத் தெரியும்

அவர்களுக்கு
தலைவாரிப் பூச்சூடவும் தெரியும்
எதிரிகளின்
தலைசீவி பந்தாடவும் தெரியும்

படுகளத்தில் ஒப்பாரி ஏன்
சிலபேர் சிலிர்க்கலாம்
இது ஒப்பாரி அல்ல
இழந்த வீராங்கனைகளுக்கொரு
வீரத்தாலாட்டு!

நம் தமிழ் இளைஞர்கள்
வீறு கொண்டவர்கள்
செஞ்சோலையில் விழுந்த ஏவுகணை
நமீதா வீட்டில் விழுந்திருந்தால்
இந்துமகா சமுத்திரத்தை
இங்கிருந்தே தாண்டியிருப்பார்கள்

இருபது மைல் இடைவெளியில்
இங்குள்ள தமிழருக்கும்
ஈழத் தமிழருக்கும்
எத்துனை வித்தியாசம்?

நாம்
குண்டுதுளைக்காத கூண்டில்
தயங்கியபடி நிற்கிறோம்
தேசக் கொடியேற்ற

அவர்கள்
குண்டு துளைப்பதற்காகவே
தயாராக நிற்கிறார்கள்
தமிழ்தேச கொடியேற்ற

நம் குழந்தைகள் கையில்
விளையாடுவதற்காக
பொம்மை துப்பாக்கிகள்

அவர்கள் குழந்தைகள் கையில்
விடுதலை ஆவதற்காக
உண்மை துப்பாக்கிகள்

நமக்கு
குளிர்பானத்தில் விஷமிருக்கிறது
அவர்களுக்கு
விஷம்தான் குளிர்பானமாக இருக்கிறது!

புறநானூற்றை
நாம் வாசிக்கிறோம்
அவர்கள்தான்
எழுதுகிறார்கள்

கலிங்கத்து பரணியை
நாம் படிக்கிறோம்
அவர்கள்தான்
நடத்துகிறார்கள்!

இருபது மைல் இடைவெளியில்
இங்குள்ள தமிழருக்கும்
ஈழத் தமிழருக்கும்
எத்துனை வித்தியாசம்?

தமிழனை
உணர்ச்சிவசப்படுத்துவது வேறு!
தமிழனுக்கு
உணர்ச்சி இருக்கிறது என்று
உணர்த்துவது வேறு!

இரண்டாவது பணியை
இந்த உண்ணாவிரதம் செய்கிறது!
உணர்ச்சி வரும் - ஒரு நாள்
புரட்சி வரும்

Friday 3 June 2011

மீண்டு வா... மீண்டும் வா...



கால் நூற்றாண்டு காலம் தமிழ் தேசத்தின்
கருவறை குழந்தை வரை
உயிர் பூத்து உச்சரித்த பெயர்
ரஜினிகாந்த்!

ரஜினி என்ற மூன்றெழுத்து மந்திரம்
சலூன் கடைகளில் துவங்கி
சட்டசபை வரைக்கும்
அசைத்து பார்த்த மந்திரம்!

இருநூறு கோடி ரூபாய் வியாபாரம்
எட்டுகோடி தமிழர்களின் ரசனை
இரண்டையும் ஏமாற்றாத
ஒரே ரஜினி!

சூரியன் - இலை
இரண்டுக்கும் அருகே இருந்தும்
இலையில் சாப்பாடு உண்டதில்லை ரஜினி
சூரிய குளியல் கொண்டதில்லை ரஜினி!

ரஜினிகாந்த் மட்டும்
ஒரு முடிவெடுத்திருந்தால்
தமிழக அரசியல் கொஞ்சம்
தடம் பெயர்ந்திருக்கும்..
ஜார்ஜ் கோட்டைக்கு - அவர் பெயர்
இடம் பெயர்ந்திருக்கும்!

புகழின் உச்சி அவரை
கைநீட்டி அழைத்தபோதும்
அமைதி பள்ளத்தாக்கில்தான்
அடைக்கலம் புகுந்தது
அந்த காந்தக்காற்று!

சாம்ராஜ்யம் அவருக்கு காத்திருந்தது
ஆனால்
சன்யாசம் அவருக்குள் பூத்திருந்தது

வானமே அவரின்
உயரம் என்ற கட்டத்தில்
தியானமே அவருள்
தேடல் என்றானது.

இந்திய நடிகர்களிலேயே
நடிகர் எனும்
உருவத்தால் ஏற்படும் பிம்பத்தை
உடைத்து நடந்தவர் ரஜினிதான்!
எவரெஸ்ட் அளவுக்கு
வெற்றிகள் உயர்ந்த போது
அதைவிட உயர்ந்து நின்றது
அவர் எளிமை!

கலை தேவதை உழைத்த எல்லோருக்கும்
பூங்கொத்து கொடுத்தாள்
ரஜினிக்கு மட்டும்தான்
தன் சொத்தையே கொடுத்தாள்!

கடவுளுக்கு மூச்சுத் திணறலா என்ற
கண்மூடி ரசிகர்கள் முதல்
அவரொரு யோகி என்ற
அறிவுசால் நண்பர்கள் வரை
ரஜினி ஒரு ஸ்ரீசக்கரம்!

சினிமா என்னும் தீக்குச்சியில்
ரஜினி என்ற
மனிதனுக்கு மட்டுமே தெரிந்தது
மகாதீபம் ஏற்றும் ரகசியம்!

வெள்ளை தாடி
வரண்ட கேசம்
உலர்ந்த சிரிப்பு
பற்றற்ற மனோநிலை
ஒரு சூப்பர் ஸ்டார் என்றால்
2200ல் எவரும் நம்ப மாட்டார்கள்!

ரஜினி மீண்டும்
பழையபடி வரவேண்டும்
அவர் நடிப்பதற்காக மட்டுமல்ல
அவர் எளிமையை இளைஞர்கள்
படிப்பதற்காகவும்தான்!

ரஜினி எனும் தூய மனிதா
மீண்டு வா
மீண்டும் வா!

உழைப்பின் மூலம்
உச்சம் தொடலாம்
நீயே எடுத்துக்காட்டு

இப்பிறவிக்குள்ளே
இன்னொரு பிறவியை
நீயும் எடுத்து காட்டு!