Thursday 26 May 2011

கீட்ஸ்


மஞ்சள் பறவை எனும் கட்டுரைத் தொகுப்பில் இருந்து...
(சமூகவியலும் அறிவியலும் அழகியலும் கலந்த 24 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு)
(சமூகவியலும் அறிவியலும் அழகியலும் கலந்த 24 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு)
பக்கங்கள் : 200
விலை: ரூ.100
புத்தகம் வாங்க அணுக வேண்டிய முகவரி:
குமரன் பதிப்பகம்
19 கண்ணதாசன் சாலை,
தி.நகர், சென்னை - 17
பேச: 044-24353742 , 24312559
கீட்ஸ்

கொஞ்ச நேரம், விண்ணில் ஒளிவட்டமடிக்கும் நிலாவை இமைக்காமல் பாருங்கள். இரண்டொரு நிமிடம் சென்ற பின்பு நிலா கண்ணுக்குள் ஊறிப்போய் வெளிச்சம் பொங்கி வழிய ஆரம்பிக்கும்.
இப்போது கண்களில் ஒரு ஈரப்பசை கூட ஏற்படலாம். கண்களை இனி இறுக்க மூடிக்கொள்ளுங்கள். கண்ணுக்குள் இருக்கும் இருட்டினுள் நிலா தெரியும்.
அப்படித்தான் கவிதைகளும்‚ ஒரு கவிதையை ஆழ்மனதில் நுகர்ந்து வாசித்தபின் மனம் மூடி சிந்தனை செய்தால் அந்த கவிதையின் உள்ளொளி உதயமாக வேண்டும்.
கீட்சின் கவிதைகள் அத்தகையவை.
ஒரு குழந்தையின் அன்பை மாதிரியான இயல்புணர்வு மிக்கவை கீட்சின் கவிதைகள்.
பூக்களில் மிகக் குறுகிய ஆயுட்காலம் கொண்டது பார்லிப் பூ‚ அது பூத்த ஒரு நிமிடத்தில் உதிரும்.
கவிதை உலகில் கீட்சும் ஒரு பார்லிப்பூவே‚ 26 வயசில் மீசை முகத்தில் முளைத்த பிராயத்தில் மூச்சுக் காற்றுக்கு காலத்தின் பேனா முற்றுப் புள்ளி வைத்துவிட்டது.
மரணத்தோடு மல்யுத்தம் செய்தோர் பலருண்டு. மரணங் கண்டு மந்தகாசம் செய்த சிலருள் கீட்சும் ஒருவன்.
அச்சின்னஞ்சிறு புறாவின் கழுத்தில் இரண்டு இரும்பு குண்டுகள் இரண்டு சகோதரர்கள், இரண்டு சகோதரிகளை காப்பாற்ற வேண்டிய கடமைகள் அவை.
கடலுக்குள் சில இடங்களில் எரிமலை வெடிக்கிறது. ஆனால் கடல் குறைந்த அலைகளையே கரையோரம் குவிக்கிறது.
கவிஞனும் அத்தகையவனே!
அவன் வாழ்வில் பல முட்களின் ஸ்பரிசங்கள் இருப்பினும் அவன் உணர்வுகள் ரோஜாச் செடிகளையே சிந்திக்கின்றது.
கீட்ஸ் ஒரு முறை மரத்தடி ஒன்றுக்கு வந்தான். அதில் ஒரு நீரோடை‚ மரத்தின் உரு நீரோடையில் தெரிகிறது. காற்று வந்து மரத்தின் கூந்தல் கோதிவிட, தன் முகம் பார்க்கிறது மரம்.
இரண்டையும் பார்க்கிறான்.
மரத்தைப் போய் அணைத்துக் கொள்கிறான். அதன் மடியில் தலைசாய்த்துக் கொண்டான். நதியின் மடியில் கால் போட்டுக் கொண்டான். பேருந்தில் அம்மா மடியில் தலைசாய்த்துக் கொண்டும் அப்பாவின் மடியில் கால் போட்டுக் கொண்டும் தூங்கிப் போகும் குழந்தை மாதிரி சயனித்துக் கொண்டான்.
மரத்திலிருந்து சிறு பூக்கள் சிதறின. ஓரிரு பூக்கள் அவன் விழி மேல் விழுந்தன. இமை மூடி பூவை கண்ணில் தாங்கினான்.
அவன் இதயத்தை அழுத்திய சுமை, கரைக்கு வந்த நீர்மூழ்கிக் கப்பலாய் மேலே கிளம்பி வருகிறது. கண்களில் ஜில்லென்று சில்லிட்ட சிறுதுளிக் கண்ணீர் துளிர்க்கிறது. அது அவன் கன்னம் வழி இறங்கி கீழே சொட்டி உலர்ந்தது. கண்ணீர் விழுந்து உறைந்த இடத்தை பார்த்தான். அதில் அவன் காதலி பேனி ப்ரவ்னி தெரிகிறாள்.
அவன் சுவாசத்தின் உன் பிரிகிறது. காற்றழுத்தம் பனிகால உதடு போல் அவன் கோடை காலத்தில் அவன் உதடு உலத்தினான். மனுசு பாளம் பாளமாய் வெடிக்கிறது. வெடிப்புகளில் எல்லாம் பேனி ப்ரவ்னி.
காதல் எனும் ஆகுதியின் கீழ்தான் இன்னும் ஆதவனே எரிகிறது. காதல் கவிதைகள் பொதுவாக அதீத கற்பனை தழும்பி வழிவதாகவே இருக்கும். ஆனால் அதன் உள்ளீட்டில் துப்பறிந்தால் சுத்த சோகமே செத்து மிதக்கும்.
காதலி பேனி ப்ரவ்னியை எண்ணுகிறான். அவளை எண்ணாத நொடிகள் இல்லையெனினும், கவிதையாக அவளை எண்ணுகிறான். அவள் பிரிவு அவன் கண்களில் அச்சுலையில் சூடு ஆறாத ஊசிகளை இறக்குகிறது. அருவில் மரமும் நதியும், அவனையும் அவளையும் இணைத்து எழுதறான்.
ஏ... மரமே!
இது டிசம்பர் இரவு!
வசந்த காலத்தில்
உன் மீதிருந்த
வனப்பு இப்போதில்லை!
பசுமை இல்லை
பூக்கள் இல்லை
குயில்கள் இல்லை
எனினும் மரமே நீ
மகிழ்ச்சியில்லாமல் இல்லை!
ஏ... நதியே!
இது டிசம்பர் இரவு!
வசந்த காலத்தில்
உன் மீதிருந்த
வாலிபம் இப்போதில்லை!
அழகு இல்லை
ஆரவாரம் இல்லை
எனினும் இப்போதும் நீ
இனிமையை முணுமுணுத்துக் கொண்டேதான்
ஓடுகிறாய்!
ஏ.. மனமே!
மரமும் நதியும் போல்
யுவதியும், வாலிபரும்
மாறி விட்டால்...
கடந்த கால வசந்தங்களை
எண்ணிக்
கண்ணீர் வடிக்காது
காலம் கழிக்கலாமே..!
கீட்சின் கண்கள் சிரிக்கின்றன. இப்போது என் கண்களோ சேர்ந்து சிரிக்கின்றன. ஒருவர் உதட்டில் சிரிப்பைக் கண்டால் பதிலுக்கு நாமும் சிரிப்பது என்பது நாகரீகம் மாதிரியே, ஒருவர் கண்ணால் சிரிப்பது கண்டதும் நாமும் கண்களால் சிரிப்பது. கண்கள் சிரிப்பது என்றால் அழுகை.

இசை என்பது யாதாகப் பட்டதெனில், மனிதனை மனிதனாகத் தன்னை உணரச் செய்வதற்கானதோர் ஏற்பாடு‚ இருட்டு வானில் நிலா ஆலாபனை செய்துக் கொண்டிருக்கும். ஒருசில பனித்துளிகள் மட்டும் அவசரப்பட்டு ப+மியில் சொட்டிக் கொண்டிருக்கும்.
மொட்டை மாடியில் கொசுக்களும் இல்லாத் தனிமையில் ஒரு பாய் போட்டு தாகமெனில் குடிக்க ஒருவேளை நீர் கொணர்ந்து கொண்டு, தலைக்கோர் தலையணை, காலுக்கோர் தலையணை, கட்டிப்பிடிக்க ஒரு தலையணை என சயனித்துக் கொள்வோம்.
இப்போது ஒரு இசையை அது புல்லாங்குழலாகவோ அல்லது வயலினாகவோ அல்லது வீணை ஒலியாகவோ அல்லது வேறு எவ்வித உணர்ச்சிக்கும் தள்ளி விடாத சினிமா பாடலாகவோ அது இருக்கலாம்.
செவி குளிர இசை பாய்ந்து இதயத்தை சென்று ரம்மியம் செய்யும். மழை பெய்த நிலம் போல மனம் பளிச்சென சில்லிடும்.
கீட்சுக்கும் இம்மாதிரி இசை ரசிக்கும் பழக்கம் இருந்திருக்க வேண்டும். இசை ஒரு அற்புதமானது என்பதை அவன் உணர்ந்திருக்க வேண்டும்.
இசை என்பது தேடிச் செல்ல வேண்டியதில்லை. அது நம்மைத் தேடி நகர்ந்து வரும். அது தான் இசையின் தனிச்சிறப்பு.
அமைதியாக மனசைத் தாழ்ப்பால் போட்டு சாத்திக் கொண்டு மூச்சு விடும் சப்தமும் காதில் ஒலிக்காதபடி ஓரிடத்தில் இருக்கலாம்.
எங்கிருந்தோ ஒரு குருவி சிறகடிக்கும், இது ஒரு இசை‚ தண்ணீர் குழாயில் நீர் தாளம் மாறாமல் தளக்தளக் எனச் சொட்டும், இது ஒரு இசை!
துணி காயப்போட்ட ஒரு படபடப்பை படம் கத்தும், இது ஒரு இசை‚ ஜன்னல் வழி காற்று வந்து மேஜை மீது காகிதங்களைய் புரட்டி நாள்காட்டியைச் சுற்றி வளைக்கும், இது ஒரு இசை!
சாலையில் ஏதோ ஒரு வாகனம் விர்ரென்று சப்தமிட்டு, பிறகு விர்...ரெ..ன்..று ஒலி குறைத்து மறையும் இது ஒரு இசை!
இங்ஙனமாய் உலவச் சின்னம் முழுக்க இசை பொங்கி நிரம்பி வழிகிறது.
கீட்ஸ் இது பற்றி தம் அபிப்ராயத்தை ஒரு தட்டின்மேல் எழுதுகிறான்.
நாம் இதுவரை சந்தித்த
இசையெல்லாம்
இனிமையானதே...!
ஆனால்
அவற்றையெல்லாம் விட
இனி கேட்கப் போகிற
இசை
இன்னும் இனிமையானதாக இருக்கும்!
கீட்ஸ் இசை பற்றி மற்றொரு உயர்வாய் மிதந்து ஓட்டிக்கொண்ட கருத்தொன்றைக் கூறுகிறான்.
சுகமான இசை
சோகமான இசையே!
கீட்ஸ் இன்னொரு கவிதை எழுதுகிறான். கிட்டத்தட்ட அது புறநானூறு போல் துவங்குகிறது. ஆனால் அகநானூற்றில் போய் முடிகிறது.
கவிதைக்குள்ளே வேறுவேறு எண்ணங்கள்.. வேறுவேறு உருவ உணர்ச்சிகள் எல்லாம் கிரகங்கள் மாதிரி‚ தனித்தனியே தத்தமது பாதைக்கேற்ப சுற்றி வரும். ஆனால் அனைத்துமே காதல் எனும் சூரியனையே சுற்றிவரும்.
காதல் ஒரு கவிஞனுக்கு எவ்வகையிலிருந்தோ ஒளி பாய்ச்சுகிறது. அதன் ஒளிவீச்சில்தான் கவிஞனுடைய அடைத்து வைக்கப்பட்ட உணர்ச்சிகளுக்கும் உருப்பு மாரிய மின்னல்களின் பிரகாசம். மின்மினிகளின் ஊர்வலம்‚ மின்சாரங்களின் அணிவகுப்பு!
கீட்ஸ் முழுக்கமுழுக்க காதலால் நெய்யப்பட்ட கவிஞன்‚ அவன் கண்களின் சிடாட்யின் காதல். இதயத்தின் துடிப்பிலும் காதல்!
காதல் என்றதுமே காதலியைக் காதலிப்பதுதான் காதல் என்று அல்ல.
அன்பின் அந்த வெளிப்பாடும், நேசத்தின் நிறை இசை இதயத்தை தாண்டிய பார்வையுமே காதல்!
ஒரு தாயின் மீதும் காதல் கொள்ளலாம். ஒரு பூவின் மீதும் காதல் கொள்ளலாம்.
நட்பு ஒரு வகை காதல். தாய்மை ஒருவகை காதல் காமம் ஒரு வகை காதல்.
காதலின்றி ஜெகமில்லை என்று கர்ஜிக்க காரணிகள் இவைகளே.
போர் வீரனே..
முகத்தை தழும்புகளால்
அலங்கரித்து கொண்டவனே!
துயரங்களின் மறுபதிவாய் - நீ
தயங்குவதன் காரணம் என்ன?
அறுவடை முடிந்து விட்டது.
அணிலின் நெற்களஞ்சியமும்
நிரம்பி வழிகிறது
நீ சோர்ந்திருக்க காரணமென்ன?
எனத்துவங்கி பயணம் போகிறது கவிதை. வீரனே என்ன சோர்வோ என்று பெரிய
ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. காரணம் காதலாகத்தான் இருக்கும். ஆனால் இக்கவிதையில் கீட்ஸ் ஒரு உவமை கூறியுள்ளான். அதுதான் ஆழ சிந்திக்க வேண்டியுள்ளது.
‘அறுவடை முடிந்து விட்டது
அணிலின் நெற்களஞ்சியம் கூட
நிரம்பி வழிகிறது
நீ சேர்ந்திருக்க காரணமென்ன” என்று வினவுகிறான். இதில் அணிலின் நெற்களஞ்சியம் நிரம்பி வழிகிறதென்கிறான். நெற்களஞ்சியம் நிரம்ப ஒரு விவசாயியை உவமையாக்கலாம். ஒரு ஏழைக் குடியானவனை உவமையாக்கலாம். வேறு பறவைகளை உவமையாக்கலாம்.
ஆனால் அணிலை உவமையாக்க என்ன நோக்கம்?
அணில் ஒரு அஹிம்சாவாதி. அதன் கண்களை கவனியுங்கள் அதில் எப்போதும் ஆசிரியனைப் பார்க்கும் மாணவக் குழந்தையின் பார்வையே ததும்பும்.
பொதுவாகவே அனைத்து உயிரினமும் உணவு சேமிக்கும். ஆனால் அணில் சேமிக்கையில்தான் பிற முதலாளித்துவம் தலை நீட்டும்.
அணில் உணவு சேமிக்கும். ஆனால் பறவைக் கூட்டம் அவற்றை பறித்துப் பங்கிட்டுக் கொள்ளும். பிறகு குரங்கு இனம் அவற்றைக் குதறி சிதறடிக்க. பிறகு எஞ்சியவற்றை எறும்புகள் கொள்ளையிடும்.
அணில்கள் சேமிப்பும் உணவு மட்டும் எல்லோருக்கும் பொதுவாகிவிடும். அதனால்தான் அது சதா எக்காலத்திலும் உணவு தேடுகிறது. மற்ற உயிரினங்கள் உணவு சேமிப்பில் கால நிர்ணயம் கொண்டுள்ளன. ஆனால் அணில் அங்ஙனமில்லை. அது எக்காலத்திலும் உணவை தேடி வாழும். அப்படிப்பட்ட அணிலின் நெற்களஞ்சியமே நிரம்பி வழிகிறதாம்.
அப்படியானால் அணில் நெற்களஞ்சியத்தை முறையிடும் மற்ற உயரினங்களின் நெற்களஞ்சியமும் நிரம்பியிருக்க வேண்டும். அப்படியானால் அந்த அளவு நாட்டில் அறுவடை மகசூல் நிரம்பியுள்ளது.
‘இருப்பினும் உனக்கேன் வீரனே சோகம்” என்று விலை மதிப்புள்ள ஒரு வினாவை எழுப்புகிறான். ஆனால் அதனினும் விலை மதிப்புள்ள பதிலாக ‘காதல்” என்பதையும் கீட்சே கூறி கவிதையை முடிக்கிறான்.
ஆசை இல்லாத மனிதனே இல்லை. இருக்கவும் கூடாது. ஒரு மனிதன் வளர்ச்சியடைவதே ஆசையால்தான்.
துறவரம் என்பது கூட ஒரு வகை தப்பித்தல். இல்லறம் என்பதே போராட்டத்திற்கான ஆயத்தம். ஆசைகளே மனிதனை இயக்குகின்றது. ஆசை இல்லாவிட்டால் மனிதன் ஒரு மரம்போல் ஓரிடத்திலேயே இருந்திருப்பான்.
வானத்தின் நீள அகலங்களின் புள்ளி விவரங்கள் அவனுக்குத் தேவைப்பட்டிருக்காது. பூமியின் எடை உணர்ந்திருக்க மாட்டான். செவ்வாய் கிரகம் தாண்டி மனிதப் பார்வை தீட்சண்யமுற்று சென்றிருக்காது.
ஓசை இல்லாத கடலா? ஆசை இல்லாத கவிஞனா?
கீட்சும் ஆசை கொள்கிறான்.
பூமிக்கடியில் நெடுங்காலமாய்
புதைக்கப்பட்ட திராட்சை மதுவை
விரும்புகிறேன்.
கிராமத்தில் எழில்கூடி
அரும்பிய மலர்களை அடைய
விரும்புகிறேன்.
பிரான்சு நாட்டின்
பாடல், நடனம் ரசிக்க
விரும்புகிறேன்.
கண்ணாடிக் குவளையை
சிவப்பாக்கும் மதுவை
விரும்புகிறேன்.
மாதுவுண்ட பின்
எவர் கண்ணிலும் படாமல்
மறைந்து விட விரும்புகிறேன்.
அப்படியே கானகத்தில் வாழும்
உன் போன்ற நிலை அடைய
விரும்புகிறேன்.
உன் போன்ற நிலையென்று கீட்ஸ் சுட்டிக் காட்டுவது. வானம்பாடியை‚
பூமிக்கடியில் நெடுங்காலமாக புதைக்கப்பட்ட மதுவில் அதிக போதை கிட்டும். மிகுந்த சுவையுடையதாகவும், துவர்ப்புத் தன்மை நீங்காத நறுமணம் கூடியதாகவும் இருக்கும் என்பதால் அதை விரும்பினான்.
மலர்களை விரும்புகிறேன் எனக் கூறினாலும் கிராமத்து மலர்களை விரும்புவதாக கூறுகிறான். இதில் என்னவொரு முன்ஜாக்கிரதையோடு அவன் கூறியிருக்கிறான். நகரத்தில் மங்கைகளும், மலர்களும் எப்போது வேண்டுமானாலும் ஏமாற்றி விடுவார்கள். மலர்களில் நகரத்தில் காகிதங்களில் கூட உள்ளது. அதனாலேயே கிராமத்து மலர்களை விரும்பினான்.
பிரான்சு நாட்டின் நடனம், பாடல் விரும்புவதாக கூறுகிறான். தன் இனமொழி பக்தியை இங்ஙனமாய் அறிவித்துள்ளான்.
மதுவை கண்ணாடிக் குடுவையில் ஊற்றுகிறான். பின்பு அந்தக் கண்ணாடிக் குவளை மதுவின் சிவப்பு நிறம் கொள்கிறது. மது குடித்தால் கண் சிவக்கும். மது உற்றினால் கண்ணாடி குடுவையும் சிவக்கிறதே” என எண்ணுகிறான். மதுவின் சுவையை ரசித்தவன் உள்ளான். ஆனால் கீட்ஸ் மதுவின் அழகை ரசித்துள்ளான்.
மது குடித்தப்பின் உலகை விட்டே மறை என்கிறான். பிறகென்ன? துன்பமும் தொடர்ந்து வரும். துரோகமுமான உலகில் ஒரு சுயமரியாதைக் கவிஞன் வாழ சம்மதிப்பானா?
கடைசியில் ஒரு மின்னல் முற்றுப்புள்ளியாய் ‘வானம்பாடியே உன் போன்ற நிலையை அடைய விரும்புகிறேன்‚” என்கிறான். இதுதான் சரியான தேர்வு. பறவை போல் வாழ்வு வாய்த்தால் அற்புதமாக இருக்கும்‚
போராட்டம் இல்லாத உயிரினம் இல்லை. ஆனால் பறவையின் வாழ்வில் கண்ணீர் அழுகை இல்லை. இந்த ஒரே ஒரு காரணத்திற்காகவே பறவையாகிவிடலாம்.
கீட்ஸ்னுடைய மேற்கூறிய கவிதை வானம்பாடி நைட்டிங்கேல் என்ற இது மிக பிரசித்தி பெற்ற ஒன்றாகும். வானம்பாடியோடு கீட்ஸ் பேசுவது போல் அமைந்ததே இக்கவிதை.
அழகியல் உணர்ச்சியை நரம்பொங்கும் ஓடவிட்டுக் கொண்டுதான் கீட்ஸ் இக்கவிதையை எழுதியிருக்க வேண்டும்.
வானம்பாடியை நோக்கி கீட்ஸ் சொல்கிறான். இவ்வுலகம் உனக்கு ஏற்றதாக இல்லை போய்விடு பறவையே என்று அவன் எழுதுகிறான்.
‘என் செல்லப் பறவையே!
சென்று விடு
சென்று விடு
தாமதிப்பாயnனில்
உன்னைத் தொடர்ந்து
நானும் வருவேன்”
மதுவின் மூலம் அல்ல.. பின் எப்படி..? கீட்ஸ் வானம்பாடியை நோக்கிப் பறந்து வருவதாகக் கூறுகிறான். இங்கேதான் கீட்ஸ் தன்னை, கவிஞன் என்ற ஸ்தானத்திலிருந்து எந்த நொடியும் தன் வாழ்வில் கீழிறங்கவில்லை என்பதை நிரூபிக்கிறான்.
‘உன்னைத் தொடர்ந்து
நானும் வருவேன்
மதுவின் மூலம் அல்ல..
என் கவித்துவத்தின்
கண்ணுக்குத் தெரியாத சிறகுகள்
உன்னருகே என்னைக்
கொண்டு வந்த சேர்க்கும்”
கீட்ஸிடம் இருந்து இன்னொரு கவிஞன் கற்றுக் கொள்ள வேண்டியது இந்த உணர்;ச்சியைத்தான்‚ எந்த நிலையிலும் எந்த இடத்திலும் எந்த வாழ்வியல் சூழலிலும் எதைப் பார்க்கினும் எது வந்து தாக்கினும், தான் கவிஞன் என்ற நிலை மறக்கலாகாது‚
கீட்ஸ் இப்போது அடிக்கடி நோய் வயப்படுகிறான். அவன் தன் நோய்க்;கு மருந்தாக எழுத்தையே அhப்;பணிக்கிறான். மருந்தை உட்கொள்வதே வழக்கம். ஆனால் கீட்ஸ் எழுத்தை மருந்தாக உட்கொள்வதன் மூலம் வாழ்வின் பயனை அடைவதாக உணருகிறான்.
மரணம் வந்து அவன் விலாசம் விசாரிக்கிறது. கீட்ஸ் மரணத்திடம் ஒரு மனு போடுகிறான். ‘தன்னுயிரை வதைத்துப் பறிக்காமல் எடுத்துப் போ’ என்று‚
‘ஏ.. மரணமே‚
என் காற்றை (மூச்சை)
காற்றோடு காற்றாக
எடுத்துச் சென்று விடு”
எவ்வளவு வலிமையான விண்ணப்பம். இந்த விண்ணப்பத்தை மரணம் வாங்கி நம்மந்திரிகள் மாதிரி குப்பைத் தொட்டியில் விசிறி விடவில்லை. பரிசீலனை செய்தது.
‘மரணமே
உன்னை முழுமனதோடு ஏற்க
என்னுள்ளம் விழைகிறது”
என்னப்பா இது மரணத்தை ஏதோ காதலியை அடைவது போல ஆனந்தமாய் அடைவேன் என்கிறாயே..‚ மரணத்தின் நிமிஷத்திலும் - கீட்சின் வானம்பாடியின் நிறை போகவில்லை.
அப்படிப்பட்ட பெரிசுகளுக்கு காசை தண்ணீரில் கறைத்து வாயில் ஊற்றுவார்கள்‚ உயிர் பிரியும்.
கீட்சுக்கு வானம்பாடி ஆசை!
‘வானம்பாடியே
நான் மரித்தபின்
புல்தரையாக இருந்து
உன் மீட்பை கோருவேன்”
என்ற மனத்திடமுள்ள கவிஞனாக அவன் இருந்திருக்க வேண்டும்.
கீட்ஸ் தன் வானம்பாடிக் கவிதையினை நிறைவு செய்கிறான். அது எந்த இரும்பு நெஞ்சையும் தொடும்.
‘வானம்பாடியே
விடை பெறுகிறேன்
உன் குரல் தேய்ந்து வருகிறது”
இது கனவா
நான் விழித்திருக்கும் என்
மயக்க நிலையா?
உன் குரல் மறைந்தே விட்டது‚
ஆமாம் நான் விழித்திருக்கிறேன்.
அதாவது
தூக்கத்தில் ஆழ்ந்திருக்கிறேனா?
விழிப்பா-உறக்கமா என்று புரியாத ஆழ்ந்த தியானம் குரலைக் கேட்டிருக்கிறான் கீட்ஸ்.
நீ அறியாக் குரல் கொண்டோய் என்கிறான்.
கீட்ஸின் கனவுகளும் வானம்பாடியின் குரலைப் போன்றதே!

Tuesday 24 May 2011

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே


ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே



ஒரு நதி போல வேர்களில் ஒட்டியிருக்கும் மண்ணையும் பூக்களில் படிந்திருக்கும் வாசத்தையும் வருடிக்கொண்டே நடக்கிறது என் வாழ்க்கை!

என் டைரியின் பக்கங்களை மிகப்பழைய நாட்களுக்குத் திருப்புகிறேன். மங்கலான காட்சிகள் விரிகின்றன. 

ஒரு ட்ரங்கு பெட்டி, ஒரு மூட்டை சாமான்கள் இவற்றோடு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் பல இளஞ்ஜோடிகள் பலபல ஊர்களில் கூடுகளைவிட்டு குடிபெயர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில், என் அப்பா வி.பாலகிஷ்ணன்-என் அம்மா க.சரஸ்வதி இருவரும் கோவை சித்தாப்புதூர் பகுதிக்கு அதே ட்ரங்குப்பெட்டி மூட்டை சாமான்களுடன் வந்து இறங்கினர்.

பஞ்சாலை நிறுவனத்தில் என் தந்தையும், மாநகராட்சிப்பள்ளியில் ஆசிரியராக என் அம்மாவும் வாழ்க்கையின் பற்சக்கரத்தை சுழற்ற ஆரம்பித்த நேரம்! 

சாய்பாபா காலனி என்ற பகுதிக்கு நாங்கள் குடிவந்த பிறகு அம்மா அப்பா இருவரும் மாலை வரை வேலை நிமித்தமாய் என்னோடு என் கனவுகளோடு கைகுலுக்க முடியாத பொழுதுகளில் என் குழந்தைப்பருவ துள்ளல்களை ஆசைகளை ஏக்கங்களை ஆசிர்வதித்தவர் ஆச்சியம்மா!

என் இரண்டு வயது இதயத்திற்குள் நிரம்பி வழிந்த தனிமையை ஒரு குதூகல நந்தவனமாய் தினந்தோறும் மாற்றியவர் எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருந்த ஆச்சியம்மா! 

இப்போதும் கோவைக்கு செல்லும் போதெல்லாம் ஆச்சியம்மாவை சந்திக்காமல் நான் திரும்புவதில்லை.

அவரைப்போன்ற ஒரு அரிய ஜீவனை இந்த பொருளாதாரத்திற்கு அலைபாயும் பொழுதுபோக்கு உலகில் நான் கண்டதே இல்லை.

எந்த ரத்த சம்மந்தமும் இல்லாமல், எந்தவித பிணைப்புக்காவும் அல்லாமல் என்னை எல்.கே.ஜி பருவம் வரை மடியேந்தி வளர்த்துவந்த மாதா அவர்! 

சாய்பாபா காலனி இல்லம் ஒரு ஜனரஞ்சகமான பகுதி! எங்கள் வீட்டிற்கு மேலே போட்டோ ஸ்டுடியோ, டைப்ரைட்டிங் இன்ஸ்ட்டியூட், பெரிய செருப்புக்கடை, பேன்ஸி ஸ்டோர், எப்போதும் முட்டை பரோட்டா வாசமடிக்கும் தேநீர் கடை என ஒரு ஜனரஞ்சக சமூகத்துக்குள் நான் வளர்ந்தேன். 

என் ஆரம்பப்பள்ளி நாட்கள் அருகே இருந்தே எம்.சி.ஆர்.ஆர். பள்ளிக்கூடத்தில் நிகழ்ந்தது. அங்கே தமிழ் என்று எழுதுவதற்குப் பதிலாக திமில¢.. திமில்.. என்று எழுதிவைப்பதைப் செல்லமாக என் செவிவருடி கண்டித்த வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்து கையில் ஒரு சிறு பிரம்பை வைத்திருக்கும் பல் கொஞ்சம் எடுப்பாக இருந்த அந்த வாத்தியாரை ஞாபகம் இருக்கிறது. 

மிக அழகாக எப்போதும் துள்ளல் நடையோடு எங்களுக்கு வகுப்பெடுத்துப்போன ஒரு தலைமையாசிரியை ஞாபகம் இருக்கிறது.
ஒரு பழைய ஊஞ்சல்! சீசா! குட்டியாய் ஒரு விளையாட்டு மைதானம்! இங்கே பயந்த சுபாவத்தோடு எல்லா வரிசைகளிலும் பின்வரிசையைத் தேடி ஓடி நின்ற நான், ஞாபகம் இருக்கிறது!

எங்கள் குடும்பத்தில் என் அப்பாவின் அம்மாவின் வியர்வை மெல்ல மெல்ல ஒரு சிறிய உயரத்திற்கு எங்களை அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது சபர்மன் மேல்நிலைப் பள்ளியிலும்  அதனைத் தொடர்ந்து இராமலிங்கம் உயர்நிலைப் பள்ளியிலும் சேர்க்கப்பட்டேன். 

உண்மையைச் சொன்னால், எனக்கு இராமலிங்கம் உயர்நிலைப் பள்ளியில் படித்தது என்பது என் உலகத்தை வேறொரு திசைக்குத் திறந்துவிட்ட திறவுகோல் எனலாம்! ஏனெனில் நான் அங்கே படித்ததைவிட ஊர் சுற்றியது அதிகம்!  அங்கே மிகப்பெரிய நண்பர்கள் வட்டம்! நண்பர்களோடு நான் கழித்தப் பொழுதுகள் உண்மையிலேயே எனக்கு போதிமர நாட்கள் என்றே சொல்ல வேண்டும். 

கவிதை எழுதுவது மட்டும் கல்வியல்ல..! கள் குடிப்பதும் ஒருவகையில் கல்விதானே! அந்தவகையில் ஊர் சுற்றுவது முதல் உலகப்பார்வை பார்ப்பது வரை என் நண்பர்களோடுதான் என் பொழுதுகள் பூக்கத் துவங்கின! 

இதற்கிடையில் நாங்கள் சாய்பாபா காலனியை விட்டு கோவையில் பெரும்புகழ்பெற்ற முருகனின் ஆலயம் இருக்கும் மருதமலை அடிவாரத்திலே என்னுடைய அப்பா வீடுகட்டி எங்களை அழைத்துச் சென்றார். 

அந்த வீட்டைச் சுற்றி மிகப்பெரிய வயல்காடு-கரும்புத் தோட்டம் - சோளம் விளைகின்ற பூமி - பெரிய கிணறு - குபுகுபுவென அங்கே கொப்பளித்து வருகின்ற கவுண்டர் வீட்டு பம்ப் செட் என அவ்விடம் இயற்கையின் ஏகாந்தமாய் எனக்கு அமைந்தது!

அதிகாலை மேகங்கள் தரைமோதிக் கொண்டிருக்க, வித்தியாசமான அகவல் ஒலியோடு நாற்பது ஐம்பதுக்கும் மேற்பட்ட மயில் கூட்டம் எங்கள் வீட்டிற்கு முன்னால் ஊர்வலகம் போகும்!

தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்பதால் ரம்போ, ராபீன், ரோமீ என்று எங்கள் வீட்டில் கூடுதலாய் மூன்று உறுப்பினர்கள் சேர்ந்து இருந்தார்கள். அவர்களை நாங்கள் நாய்கள் என்று ஒருநாளும் எங்கள் மனதிற்குள் பிரித்துக் கொண்டதே இல்லை.

என்னுடைய அப்பாவிற்கு ஒரு பழக்கம், வீட்டிற்கு வரும்போது இனிப்புகளோ விளையாட்டு சாமான்களோ வாங்கி வராமல் சிறுவயதில் இருந்தே புத்தகங்கள் வாங்கித் தருவது அவருடைய வழக்கம்!

நன்றாக நினைவிருக்கிறது அவர் எனக்கு முதன்முதலாக வாங்கித்தந்த புத்தகம், குறளோவியம் எனும் கலைஞரின் எழுத்தோவித்தைத்தான்!   

அது என்னவென்றே புரியாத வயதில் அதைப் படிக்க ஆரம்பித்து, பின்னர் புரிந்து படித்து என என்னுடைய படிப்பார்வம் பல்கிப் பெருகியதைக் கண்டு பள்ளியில் நான் படித்து பட்டம் பெறுவதைவிட உலகப்படிப்பை நான் படிக்க ஆரம்பித்தில் என் தந்தை மிக மகிழ்ந்து நெகிழ்ந்துபோனார்.

அதனால்தான் எட்டாம் வகுப்பில் நான் தேர்ச்சி பெறாமல் வீட்டிற்கு ஒரே ஒரு செல்லப் பிள்ளையாய் இருந்தும் என் அப்பா அம்மாவின் கௌரவத்தை ஃபெய்லாகிய மாணவன் என்ற பட்டத்தோடு உடைத்தெறிந்த போது கொஞ்சமும் கலங்காமல் என்னை அரவணைத்து அடிபடும் கல் சிலையாகும், அடிபடாத கல் எல்லோரும் மிதிக்கும் படியாகும் என்று திடமும் தன்னம்பிக்கையும் டன் கணக்கில் எனக்கு அள்ளிக் கொடுத்தவர் என் அப்பா! 

பதினொன்று பனிரெண்டாம் வகுப்புகளில் எனக்கு அமைந்த ஆசிரியர் பெருமக்கள் மிகவும் அன்பிற்குரியவர்கள். 

இயற்பியல் ஆசிரியரில் இருந்து கணிப்பொறி ஆசிரியர் மற்றும் தமிழாசிரியர் வரைக்கும் எனக்கொரு தனி மரியாதையும் தனி ஆசனமும் வழங்கினார்கள். 

தினமும் நான் பள்ளிக்கு வரும்போது ஒரு வார்தையைச் சொல்லுவார்கள் நண்பர்கள்.  கோலம் என்றொரு வார்த்தை... பேனா என்றொரு வார்தை..!


நான் மறுநாள் அநத் வார்த்தைக்கு பத்து வரிகளில் கவிதை எழுதி வருவேன்.  எழுதிய கவிதையை மதிய உணவு இடைவேளையில் எல்லோரும் அடுத்தவர் உணவை அபகரித்து தின்று முடித்து ஒருவர்மடிமேல் ஒருவர் கிடந்து உறங்கி மிச்சப்பட்ட சிற்சில நிமிடங்களில் நான் எழுதிக் கொண்டு வந்த படைப்பு அங்கே அரங்கேறும்! அது அவர்கள் புரிந்து கேட்டார்களா? புரியாது கேட்டார்களா? தெரிந்து கைதட்டினார்களா? தெரியாது கைதட்டினார்களா? என்று அறிந்துகொள்ள இன்று இயலவில்லை. ஆனால் அன்று அவர்கள் கொடுத்த உற்சாகமும் கைதட்டலும்தான், பின்வரிசை மாணவனாகவே ஒரு இனம்புரியாத தாழ்வு மனப்பான்மையோடு எல்லா மேடைகளிலும் ஒதுங்கி ஒதுங்கி இருந்த எனக்குள் இலட்சம் இலட்சம் சிறகுகளை என்தோள்களுக்குப் பின்னால் தைத்துக் கொண்டிருந்தது. 

பிறகு ஒருநாள், மாநில அளவில் நடந்த கவிதைப் போட்டியில் நண்பர்களால் என் அப்பாவினால் நிர்பந்திக்கப் பட்டேன். என்ன வியப்பு.. மாநிலத்தில் முதற்கவிதையாய் என்னுடைய கவிதை..!  

அதற்கு என்னைவிட என்னை ஊக்குவித்த நண்பர்கள் அடைந்த ஆனந்த தாண்டவத்திற்குத்தான் அளவேயில்லை. 

அப்போது என்னுடைய ஒட்டுமொத்த வனளாவிய தாகத்திற்கு ஒரு பெரிய தண்ணீர்ப் பந்தல் தடாகத்தை கொடுத்தது கோவையில் உற்சாகமாய் இயங்கிக் கொண்டிருந்த இலக்கிய பாசறை என்ற அமைப்பு!

திரு.அ.மு.தமிழினியன், புவனாவால் இயக்கப்பட்ட அந்த அமைப்பில் நான் உறுப்பினராய் சேர்ந்து முக்கியமான ஒரு இடத்திற்கு வந்தேன்.  அங்கேதான் மேடைகளிலே பேசுவதற்கு, கவியரங்கங்களிலே கலந்து கொண்டு கைதட்டல்களை அள்ளுகின்ற இலாவகத்தை அறிந்து கொள்வதற்கும் ஒரு பெரிய பாசறையாய் எனக்கு அது பயன்பட்டது.

ப்ஸ்டு 2 முடித்த பிறகு பொறியியல் வல்லுனராக வேண்டும் என்கிற என் தந்தையின் தாயின் ஆசையை நிறைவேற்ற என்னால் இயன்றவரை படித்தும் உலகப்படிப்பே எனக்குள் ஊறிக்கிடந்ததே தவிர புத்தகப் புழுவாய் என்னை பழமைப் படுத்திக் கொள்ள இயலவில்லை.
மதிப்பெண்கள் மாண்டுபோனது. ஆனாலும் என் தந்தை வழக்கம்போல் இதயம் இடிந்து கிடந்த எனக்குள் ஒரு எல்லோரா ஓவியக் கூடத்தை எழுப்பினார். 

எழுத்தை, கவிதையை இரு சிறகாய் கொண்டு திரைப்படத் துறைக்குள் நுழைந்தால் என்ன என்கின்ற விஸ்வரூபமான வினாவை என்னுள் அவர் நுழைத்தார். 

எனக்குள் நடுக்கம் பரவத் துவங்கியது. 

திரைப்படத்துறை என்கின்ற பிரம்மாண்ட, அதுவும் தொண்ணூற்று மூன்றுகளில் அதனுடைய பிரம்மாண்டம் ஒரு அந்நிய நபரால்கூட ஊடுருவ முடியாத அரக்கு மாளிகையாய் அன்றைக்கு அது இருந்தது.  

மிகப்பெரிய மேதைகள் கோலோச்சிய காலகட்டத்தில் ஒரு சின்னஞ்சிறுவனாய் எப்படி உட்புகுவதென அடிமனம் வெடவெடத்தது. 

அப்போது நான் கேட்டேன். பதினெட்டு வயது நிரம்பி இருந்த பொழுதில் என்கவிதைகளைத் தொகுத்து எனக்கொரு புத்தகமாய் வெளியிட்டுத் தாருங்கள்..  புத்தகம் எனக்கொரு முகவரி அட்டை!  நான் திரைத்துறையை சந்திக்க தயாராகிறேன் என்று சொன்னேன். 

ஒரு புதிய தமிழ் எழுத்தாளன் புத்தகம் போடுவதென்பது இன்றைய அளவிலும் அவ்வளவு எளிதில் அங்கீகரிக்கப்பட்டு சாத்தியமாக்கப்படக் கூடியது அல்ல என்றால், அப்போதைய நிலையில் ஒரு பெரிய பொருளாதாரச் சுமையை தன் தோளில் சுமந்து என்னுடைய கனவை நிறைவேற்றி என்னுடைய இந்தச் சிப்பிக்குள் என்கின்ற நூலை சிற்பி பாலசுப்பிரமணியம், சேவற்கொடியோன், பாவேந்தரின் மகனார் மன்னர் மன்னன் ஆகியோர் தலைமையிலே நூல் வெளியீட்டு விழா என் நண்பர்களின் உற்சாக ஆரவாரத்தில் நிழ்ந்து முடிந்தது. 

அதன்பிறகு, நீண்டதொரு நெடியதொரு போராட்டம்! முட்கிழிசல்களுக்கு இடையே புதிதாய் றெக்கை முளைத்து வெளியேறிய புறாக் குஞ்சாய்  என்னுடைய பயணம் திரைத்துறையை நோக்கி திரும்பியது.  திரு.மருதாசலம், திரு.தன்ராஜ் ஆகிய இரண்டு விளக்குகள் என்னை இயக்குனர்  திரு.பாக்யராஜ் அவர்களை நோக்கி வழிகாட்டின. 

என் ஞாபகப் பக்கங்களை திருப்பிக் கொண்டே வரும்போது, உணர முடிகிற உண்மை ஒன்று உண்டு. 

போராடாமல் வாழ்க்கை இல்லை, நான் போராடாத நாட்கள் இல்லை. போராட்டங்கள் எனக்குப் பழகி விட்டது. போராட எனக்குப் பிடிக்கிறது. 

தொடரும் என் போராட்டங்கள் உங்கள் அன்போடு!