Sunday 15 January 2012

இரண்டாயிரம் ஆண்டு அடையாளம்




இரண்டாயிரம் ஆண்டு அடையாளம்


எங்கே அந்த கிராமங்கள்?
எங்கே அந்த பூப்பதியம்?
எல்லா வீட்டு முற்றங்களிலும்
ஓங்கி ஒலித்த பொங்கல் குரல்

கிராமம் என்ற கவிதைநூல்
நகரக் கழிவில் கிழிகிறது
பானை வாயில் பாசமில்லை
பொங்கல் மட்டும் வழிகிறது

திண்ணை என்னும் போதிமரம்
தெருவே வந்து கூடுமிடம்
காணவில்லை பலகையிலே
கடைசியாய் சேர்ந்து கிடக்கிறது

பூசணி பூக்கள் கைபரப்பும்
புல்லும் மஞ்சளும் நிரம்பித்தரும்
வர்ணகோலம் வரைகின்ற
வனிதையை இழுக்கிறது தொலைக்காட்சி

முற்றம் இல்லா வீடுகளாய்
முக்காடு போட்ட கிராமங்கள்
சுற்றம் சூழ இன்றில்லை
சுருங்கச் சொன்னால் தனித்தீவாய்

நீச்சல் உடையில் பேட்டிதரும்
நித்தில நடிகைகள் நிகழ்ச்சியிலே
கொதிக்கும் பொங்கல் பொங்குதம்மா
கொஞ்சம் விளம்பர இடைவெளியில்



மருந்துக் கடைகள் குறைவாக
மதுக் கடைகள் நிறைவாக
மாறும் தமிழர் திருநாட்டில்
பொங்கல் விழாக்கள் போதையிலே

எங்கே அவர்கள் இளைஞர்கள்
எல்லா கிராம கோயில்முகம்
கையில் மைக்கும் மட்டையுமாய்
தமிழர் திருவிழா செய்வாரே

பாதி இளைஞர் வெளிநகரில்
மீதி இளைஞர் அயல்நாட்டில்
ஆனது போக மீதமுள
ஆறஞ்சு பேர்கள் திரையரங்கில்

ஜல்லிக்கட்டு மாடு எல்லாம்
ஜனகர் கொட்டாய் சுவரொட்டியை
அள்ளித் தின்று அலைகிறது
அடடா வீரம் கறுப்புவெள்ளை!

இரண்டு மூன்று புதியபடம்
இடையில் நகைச்சுவை பட்டிமன்றம்
இரண்டாயிரம் ஆண்டு இனத்திற்கு
இதுதான் விழா அடையாளம்


திரும்பப் பழைய பொலிவுடனே
தமிழர் பொங்கல் வருமொருநாள்
பழக்கம் காரணம் இக்கவியை
வழக்கம் போலவே முடிக்கின்றேன்

Sunday 1 January 2012

தேனீர் கடை நட்பு அணைக்கட்டில் உடைந்திடுமா?


தேனீர் கடை நட்பு அணைக்கட்டில் உடைந்திடுமா?

வித்தகக் கவிஞர் பா.விஜய்


தேனீர் கடைதான் சேட்டா
நம் நட்புக்கு பால் காய்ச்சிய இடம்

ஊணுகழிச்சோ என்பதுதான்
உன்னோடு நான் பேசிய
நட்பின் பிள்ளையார் சுழி


அடப்பிரதமனில் இருந்து
அரிகரசுதனே வரைக்கும்
எத்தனை பிராயங்கள் நாம்
எங்கெங்கிலும் கழிச்சிட்டுண்டு

தமிழன் - மலையாளி
நானும் பிரித்ததில்லை
மலையாளி - தமிழன்
நீயும் பிரிந்ததில்லை

தமிழ் மொழியின்
தொன்மைக் கிளை வடிவமே
மலையாளம் என்பதறிவோம்
நீயும் நானும்

‘புட்டும் வேட்டியும்’ என்ற
ஆதித் தமிழ் அடையாளங்களை
நான் விட்டுவிட்டேன்
நீ தொடர்கின்றாய்

வசந்த விழாவை நான்
வரலாற்றில் தொலைத்தேன் - அதை
விஷீக் கனியில் அகழ்ந்தெடுத்தாய்
வணங்குகின்றேன் சிரம்!

உலகில் எல்லா
இனக் குழுக்களுக்கு இடையிலேயும்
தீ மூட்டி பார்த்த அரசியல்தான்
உனக்கும் எனக்கும் இடையே..

மலையாளி என்னும்
இனப் பலகைக்குப் பின் இருக்கும்
மனிதம் என்ற உணர்வில் சொல்

அங்கே நடப்பது
அணை உடையும் பிரச்சனையா..?
ஆட்சி உடையும் பிரச்சனையா…?


வில் கொடி பறந்த நாட்டில்
தமிழன் புகக் கூடாதெனில்
தகர்கிறது சேவற்கொடியின்
தன்மான கல்லறைகள்

விரிந்த முல்லைப் பெரியாற்றில்
விரிக்கப்பட்ட வலை
மலையாள நாட்டுக்காக அல்ல..
மலையாளிகள்; ஒட்டுக்காக!

நீர் மட்டம் உயர்தல்
நீர் மட்டம் குறைத்தல்
என்ற நிலை நியாயம்;
யார் மட்டம் உயர்த்தல்
யார் மட்டம் குறைத்தல்
என்ற நிலை துரோகம்!

அணையில் விரிசல் விழுமென
அச்சப்படுகிறாய் நீ
உலக வரைபடம் எங்குமிருக்கும்
தமிழர் மலையாளிகளின்
அன்பில் விரிசல் விழுமோ என
அஞ்சுகிறேன் நான்!

சுமூகமாய் பாய்ந்து வந்தால்
அது நதி
கேரள அரசியல் சமூகமாய்
அது முடிந்துவிட்டால்
அது நதியல்ல.. சதி!

மத்திய அரசு சொல்வதென்ன?
மாநில அரசு சொல்வதென்ன?
மனிதம் என்ன சொல்கிறதோ
மலையாளிகளே அதைச் செய்யுங்கள்

ஒன்று உறுதி..
முல்லைப் பெரியாறு
அங்கேயே நின்றுவிட்டால்
அது சேறுக்கு உதவும்
இங்கே வந்ததென்றால்
அது சோறுக்கு உதவும்!

கேரள கரைவேட்டிகளே
நதிக்கு கரை
நாங்கள் செய்து கொள்கிறோம்..
நதிக்கு கறை
நீங்கள் செய்யாத வரை!