காவியக்கவிஞர் வாலி அவர்களின் அணிந்துரை
ஒவ்வொரு பாலிலிருந்தும் ஒருசில குவளைகள் எடுத்து - முப்பாலின் இறைச்சிப் பொருளை -
வசன கவிதையில் - தனக்கே வசமாகி நிற்கும் தமிழ்நடை கொண்டு - நமக்கு வழங்கியிருக்கிறார்...
‘வித்தகக்கவிஞர்’ என கலைஞரால் விளிக்கப் பெற்ற - என் இனிய இளவல் கவிஞர் பா.விஜய் அவர்கள்.
‘பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு?’ என்று ஒரு அற்புதமான வாக்கியம் - வி.ஸ.காண்டேகரின் ‘கிரௌஞ்ச வதம்’ நாவலில் வரும்.
அதுபோல் - என் அன்புத்தம்பி திரு.பா.விஜய்க்கு அறிமுகமோ, விளம்பரமோ தேவையில்லை.
படத்துறையிலும், பதிப்பகத்துறையிலும் நிறைய சாதனைகள் நிகழ்த்தி - தமிழ் கூறும் நல்லுலகெங்கும், உச்சி முகர்ந்து அவரை உச்சத்தில் உட்கார்த்தி வைத்திருப்பது, வெள்ளிடை மலை. நான் இந்நூல் முழுமையும் வரிவிடாமல் வாசித்தேன்.
உவமைகள், உருவகங்கள், உள்ளீடு இவை மூன்றிலும் விஜய்யின் வித்தகம், அவரது முந்தைய நூல்களைவிட விஞ்சி நிற்கிறது.
சுருங்கச் சொன்னால் - அவரது எழுத்து, வைகலும் மெருகேறி வருகிறது. இளம் வயதுதான்; இன்னும் நிறையக் காலம் இருக்கிறது, விஜய் ஒரு உலகளாவிய கவிஞராகப் பிறங்குவதற்கு!
தகுதியும் அதேநேரத்தில் வெற்றியைத் தன் தலைக்குக் கொண்டுபோகாத தன்னடக்கமும்; எவரையும் ஈர்க்கவல்ல, சதா புன்னகைக்கும் முகவிலாசமும் -
பா.விஜய்யை - பலருக்குப் பிடிக்க வைத்திருக்கிறது. ஒரே நேரத்தில் - நல்ல கவிஞனாகவும் நல்ல மனிதனாகவும் பிறங்கவோர் அறிதாகப்பட்ட நாளில் -
பா.விஜய் மேற்சொன்ன குணநலம் வாய்க்கப் பெற்றிருப்பது.
அவர் - நல்ல தாய் தந்தை நல்கிய புத்திரனாகவும்; நல்ல மனைவிக்கு உகந்த மணாளனாகவும் விளங்குவதைச் சுட்டிக்காட்டுகிறது.
இந்தநூலில் எது எது - எப்படி எப்படி இருக்கிறது எனப் பட்டியலிட்டுப் பேசுதல் வெகு சிரமம்.
ஒரு கற்கண்டுக் கட்டியில் எந்தப் பக்கம் சுவைத்தாலும் தித்திக்கத்தான் செய்யுமே தவிர, கைக்க வாய்ப்பேது?
எனக்குப் பிடித்த சில வரிகளைச் சொல்கிறேன் - சிறு பட்டியலாக.
‘குயிலின் முதுகில்
ஒரு மாம்பழத்தை வைத்த மாதிரி
புத்தக மூட்டை தூக்கி
பள்ளி சென்ற காலம் அது!’
‘ரவிக்கை அணியாமல்
கிழிந்துபோன உடையணிந்த
பெண்களைப்போல்
ஒரு குடிசை வீடு’
‘பிரசவம்’ என்னும் தலைப்பைத் தாங்கிய பாவில்-
‘ஒருவிரல் பள்ளத்திலிருந்து
ஒரு ஐந்து கிலோ உடம்பு
பிதுங்கி வருகிறதே!’
- இதுபோல் நிறையச் சொல்லலாம். உட்கார்ந்து விரிவாய் எழுத - என் உடல்நிலை இடம் கொடுக்காததால்
என்னால் இன்னும் அதிகமாய்ச் சுட்டிக்காட்டி ஏலவில்லை.
பா.விஜய்யின் படைப்புகள் பற்றிப் பின்னிப் பின்னிப் பேசுவதைவிட -
இந்தநூலும், அவர் படைத்த இதர நூல்களையும் வாசகர்கள் கைகளில் கொடுத்துவிடுவதே மேல்.
அவர்கள்
விழியால் உண்ண வேண்டிய
மொழிகள் இவை.
கவிஞர். வாலி
வாழ்த்துக்கள்
ReplyDelete-----------
அசோகர் பள்ளிக்கூடம்
-----
எங்கள் ஊரில்
மழைக்கு ஒதுங்குவதில்லை
பள்ளிக்கூடத்தில்
இருப்பது
மரத்தடி பள்ளிக்கூடமே
http://ivaikavidhaialla.blogspot.com/2010/03/blog-post_4340.html
வாழ்த்துக்கள்
ReplyDelete-----------
அசோகர் பள்ளிக்கூடம்
-----
எங்கள் ஊரில்
மழைக்கு ஒதுங்குவதில்லை
பள்ளிக்கூடத்தில்
இருப்பது
மரத்தடி பள்ளிக்கூடமே
http://ivaikavidhaialla.blogspot.com/